மாசி மகம் நாளில் விரதம் மேற்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்...!!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:55 IST)
'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்" என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.


மாசி மக நாளை, கடலாடும் நாள் என்றும், தீர்த்தமாடும் நாள் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாசிமகத்தில் விரதமிருப்பவர்கள் காலையில் எழுந்து ஆறு, கடல், குளம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பிறகு உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டுவிட்டு, இரவு பால், பழத்தை சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

மாசிமகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாசிமக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்