நம் மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்களை போக்கும் கோவில் எது தெரியுமா...?

வியாழன், 9 டிசம்பர் 2021 (11:23 IST)
மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால் நல்ல சகுனம் என பெரியோர்கள் கூறுவார்கள்.


பல்லி நம் உடலின் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. நமக்கே தெரியாமல் சில சமயங்களில் பல்லி நம் மீது விழும். பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் தோஷத்தை எப்படி நிவர்த்தி செய்வதென பின்வருமாறு பார்ப்போம்.
 
ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு மைந்தர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வரச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்ட கௌதம முனிவர் கடும் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டாராம். பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதால் காஞ்சி சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் முனிவர்.
 
பிறகு அந்த சிஷ்யர்கள் இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு பெருமாளிடம் மோட்சம் வேண்டி கேட்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும். உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று கூறினாராம். சூரிய, சந்திரன் இதற்குச் சாட்சி என்று கூறி அவர்களுக்கு மோட்சம் அளித்தாராம்.
 
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லியை தரிசித்தால் நம் மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகும்.
 
அதே போல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும் இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்