வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள் படங்கள் என்ன தெரியுமா...?

சனி, 19 பிப்ரவரி 2022 (12:03 IST)
அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.


குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.

எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.

குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.

மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.

அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்