தெய்வீக மூலிகை: பெருமாளுக்கு உகந்த துளசி...!

துளசி இலையின் நுனியில் நான் முகனும் (பிரம்மா), மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு  ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை.  வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும்,  உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.
 
பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது அர்ச்சனைக்காகவும், அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி  இலை முக்கியத்துவம் பெறுகிறது.
 
பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர். துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை  இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.
 
கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும். துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.
 
பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும்.  எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்