இங்கிலாந்தை சேர்ந்தவர் பென்பென்சன். இவர் அந்த நாட்டில் வீடுகள் கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். 34 வயதான இவர் சொத்து சேர்க்க புதிய விதிகள் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில் பணம் சம்பாதிப்பதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறி இருக்கிறார். இந்த புத்தகத்தை படிக்கும் 10 வாசகர்களுக்கு ரூ.7 கோடி பரிசு அளிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதுவதற்கு 7 மாதங்கள் ஆனதாக கூறும் அவர் புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியிலும் ஒரு எண் அச்சிடப்பட்டு இருக்கும், ஒவ்வொரு 2 மாதத்துக்கு ஒரு முறையும் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் அறிவிக்கப்படும். இந்த நம்பர் உள்ள புத்தகம் வைத்து இருப்பவர்களுக்கு தலா 70 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும். இந்த புத்தகத்தை வாங்குவதற்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர் என்கிறார்.
புத்தக விற்பனையை அதிகரிப்பதற்காக இப்படி செய்யவில்லை. புத்தக விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பது தான் என் நோக்கமாக இருந்தால், இந்த 7 கோடி ரூபாயை வேறொரு தொழிலில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கத்தான் முயற்சித்திருப்பேன். இப்படி பரிசாக அளிக்க விரும்பியிருக்க மாட்டேன். பணம் சம்பாதிக்க விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளேன் என்கிறார் பென்பென்சன்.