அப்பர் இயற்றிய தேவாரம் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட உள்ளது என்று தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவ்வை நடராஜன், பாட்னா திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழில் உள்ள அப்பர் தேவாரம் 4, 5, 6 திருமுறைகளை இந்தியில் மொழியாக்கம் செய்து புத்தகமாக வெளியிடுகிறது. இந்தி மொழியாக்க பணிகளை சென்னை மாநில கல்லூரி ஓய்வு பெற்ற இந்தி பேராசிரியர் சுந்தரம் செய்துள்ளார்.
இந்திய ஒருமைப்பாடு வளர்வதற்கு, ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு வரும் இலக்கியங்களால் தேசியம் வலுப்படும். அப்பர் தேவாரம் இந்தி மொழியாக்க புத்தக வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக பவள விழா மண்டபத்தில் வியாழக்கிழமை நடக்கிறது.
புத்தகத்தை தொழிலதிபர் பொள்ளாச்சி என்.மகாலிங்கம் வெளியிட, சமூக சேவகர் ஷோபாகாந்த் தாஸ் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், செம்மொழி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.ராமசாமி உள்பட தமிழ் அறிஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர் என்று கூறினார்.