தமிழ் மொழி காணாமல் போகும் வாய்ப்பிருக்கிறது'

திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (09:43 IST)
FILE
செம்மொழிப் பெருமை மிக்க தமிழ்மொழி காணாமல் போகும் வாய்ப்புள்ளதாக, தமிழறிஞர் க.பஞ்சாங்கம் தெரிவித்தார்.

பொள்ளாச்சி, என்.ஜி.எம். கல்லூரியில் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் க.பஞ்சாங்கம் பேசியது:

அனைத்து அறிவும் ஒரு மொழியைப் படிப்பதால் கிடைக்கும் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே அந்த மொழி வாழும். அந்த வகையில் தமிழ் மொழியைப் படிப்பதால் அறிவு கிடைக்கும் என்ற வாய்ப்பு இல்லாததால் தான் பலர் வேறு மொழியைப் படிக்கின்றனர்.

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்ற பெருமை தாய்மொழி மூலம் மட்டுமே கிடைக்கும். தமிழினத்தின் உட்பகை சாதி. வெளிப்பகை பெரிய வணிக நிறுவனங்கள். நாட்டில் எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல சாதிக்கு எதிரான போராட்டம் நடந்ததில்லை.

தமிழ் ஈழப் போராட்டம் 27 ஆண்டுகளாக அமைதி வழியிலும் 33 ஆண்டு காலம் ஆயுதமேந்தியும் நடந்தது. அவ்வாறு போராடிய இயக்கத்தை உலக நாடுகள் சேர்ந்து ஒழித்துக் கட்டிவிட்டன என்றார் பஞ்சாங்கம்.

சிற்பி அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார்.

கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் கவிஞர் இந்திரனுக்கு சிற்பி இலக்கிய விருதையும், ஓசை அமைப்பின் தலைவர் க.காளிதாசுக்கு பொ.மா.சுப்பிரமணியம் விருதையும் கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கினார்.

கவிஞர் சிற்பியின் "பூஜ்யங்களின் சங்கிலி' கவிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விருது பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர். பேராசிரியர் சொ.சேதுபதி நன்றி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்