காமெடி பீஸாகும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு

செல்வன்

புதன், 3 செப்டம்பர் 2014 (12:39 IST)
அபுபக்கர் அல் பாக்தாதி (Abubakar al Baghdadi) என்பவர், இராக் அல்கொய்தா அமைப்பில் இருந்தார். ஆனால் அவரது வேகத்துக்கு அல்கொய்தா சரிவரவில்லை. அல்கொய்தா ஒரு மிதவாத இயக்கமாக அவரது கண்ணுக்குத் தெரிந்ததால் "இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் சிரியா (Islamic State of Iraq and Syria)" என்ற அமைப்பைத் தொடங்கி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில் ஒரு பாதியைப் பிடித்தார். சிரியா அருகே உள்ல இராக்கிலும் போர், சண்டை என்பதால் இராக்கினுள்ளும் பாதி நாட்டைப் பிடித்தார்.
 
பிடித்த இடங்களில் உள்ள எதிரிகள் அனைவரையும் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுத் தள்ளுவதாலும், ஆவேசமாக உரையாற்றுவதாலும் இவரது புகழ் சிரியா, இராக்கில் பரவலாகிவிட்டது. இராக், சிரியாவில் இடையறாத உள்நாட்டுப் போரால் வெறுத்துப் போன மக்கள், இவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் விரைவில் பிடிபட்ட இடங்களில் உள்ள கிறிஸ்துவர்கள், ஷியா முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரை இவர்கள் கொன்று குவித்த வேகத்தைப் பார்த்து மக்கள் பீதியில் உறைந்துபோனார்கள்.
 
மற்ற நாடுகளில் எல்லாரும் ஐ.சி.ஐ.எஸ்.ஸைக் கண்டு பயந்து கொண்டிருக்க மத்திய கிழக்குப் பகுதியில் ஐ.சி.ஐ.எஸ். காமெடி பீஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்கள் கொடுமைகளைக் கண்டு வெறுத்துப் போன அரேபிய மக்கள், இவர்களைச் சமூக வலைத் தளங்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் பயங்கரமாகக் கிண்டல் செய்து வருகிறார்கள்
 
Jihadi Vogue எனும் பெயரில் ஐ.எஸ்.இ.எஸ் அணியும் உடைகளைக் கிண்டல் செய்து ஒரு பத்திரிகை, கட்டுரை வெளியிட்டது.

 
ஐ.எஸ்.ஐ.எஸ். காலிபா அபுபக்கர் அல் பாக்தாதி, டிவியில் தோன்றுகையில், அவர் கையில் இருந்த விலைஉயர்ந்த ஒமேகா வாட்ச் வெளியே தெரிந்தது. அதை ஓட்டி இந்த விளம்பரம் வெளியானது.

 
பாலஸ்தீனம், லெபனான் என மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் ஐசிஸைக் கிண்டல் செய்து பல டிவி நகைச்சுவை நாடகங்கள் வெளிவருகின்றன. அதில் ஒன்றை இங்கே காணலாம்.
 
 
அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் மூவர், லெபனானில் சாலையில் நின்றுகொன்டு வழியில் போவோர் வருவோரைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்கள் தடுத்து நிறுத்தும் முதல் லெபனான் நபர், ஒரு முஸ்லிம். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்கிறார். அப்புறம் "பஜர் தொழுகையில் எத்தனை ரக்கத்?" எனக் கேட்பதற்கு "4" எனச் சொல்கிறார். "இன்னும் ரெண்டை விட்டுட்டாயே" எனச் சொல்லி அவரைச் சுட்டு விடுகிறார்கள்.
 
அடுத்து வருபவரும் ஒரு லெபனிய முஸ்லிம். அவரிடம் "புகாரியின் ஹதீதுகளில் எத்தனை முறை "அ" வருது?" எனக் கேட்கிறார்கள்.
 
அவரும் யோசித்துவிட்டு, "வேணாம். என்னைச் சுட்டுடுங்க" எனச் சொல்லிச் செத்துப் போகிறார்.
 
லெபனிய கிறிஸ்துவர் ஒருவர் அடுத்து மாட்டிக்கொள்கிறார். "அவரை யார் சுட்டு அதிகப் புண்ணியம் பெறுவது" என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரிடையே சன்டை நடக்கிறது. கிறிஸ்துவரே "சரி, ஆளுக்கு ஒரு குண்டைச் சுடுங்க" எனச் சமாதானத் தீர்வு சொல்லியும் அதை அவர்கள் ஏற்காமல் சண்டை போட, அவர் மாரடைப்பு வந்து இறந்துவிடுகிறார். ஐஎஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இருவரும் அவர் மேல் விழுந்து கதறி அழுகிறார்கள். இறுதியாக இஸ்ரேலியர் ஒருவர் அங்கே வருகிறார். அவரை எதுவும் செய்யாமல் "சரி, நீங்க போகலாம்" எனச் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.
 
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இஸ்ரேலை எதிர்த்துப் போராடாமல் இஸ்லாமிய நாடுகளைப் பலவீனப்படுத்துவதாக இந்த ஸ்கிட், இப்படி நகைச்சுவை உணர்வுடன் குற்றம் சுமத்துகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்