திருமலையில் பக்தர்கள் வசதிக்காக 36 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 428 அறைகளுடன் கூடிய பாஞ்சஜன்யம், சன்னிதானம் ஆகிய புதிய விடுதிகளை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானைக் காண வரும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் 36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 மாடிகளுடன் கூடிய 380 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் பாஞ்சஜன்யம் விருந்தினர் மாளிகை, 48 சொகுசு அறைகளுடன் கூடிய சன்னிதானம் விருந்தினர் மாளிகை ஆகியவற்றை முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்தார்.
இதற்காக ராஜசேகர ரெட்டி நேற்று முன்தினம் இரவு திருமலை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் ரூ.44 கோடி செலவில் புதிதாக கட்டப்படவிருக்கும் கோகுலம் விருந்தினர் இல்லத்துக்கான அடிக்கல்லையும் முதல்வர் நாட்டினார்.
இதையடுத்து இரவு திருமலையில் தங்கிய ராஜசேகர ரெட்டி நேற்று காலை 7 மணியளவில் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டபின் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று தனி ஹெலிகாப்டரில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.