ஈஷாவில் யக்சா மற்றும் மகா சிவராத்திரிக் கொண்டாட்டங்கள்!
சனி, 18 பிப்ரவரி 2012 (19:10 IST)
ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிகுந்த உற்சாகத்துடனும், ஆன்மீகத் தீவிரத்தன்மையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் நடைபெறும் சத்குரு அவர்களுடனான சத்சங்கத்தில் உலகெங்கிலிருமிருந்து 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றனர். சத்குரு அவர்களின் சத்சங்கங்கள், சக்தி வாய்ந்த தியானங்களோடு, உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் சேர்ந்து பார்வையாளர்களை ஒரு ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை அறிந்துணரும் வாய்ப்பை அளிக்கின்றன.
WD
இந்த வருடம் மகாசிவராத்திரி பிப்ரவரி 20, 2012 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் மாலை 5.40 மணிக்கு பஞ்சபூத ஆராதனை நிகழ்ச்சியோடு மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. சத்குரு அவர்கள் நடத்தும் பஞ்சபூத ஆராதனை உடலின் ஐந்து அடிப்படைக் கூறுகளை தூய்மைப்படுத்துவதோடு உடல், மன ஆரோக்கியத்தை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து ஆன்மீக குருமார்களுக்கும் தியானலிங்க யோகத் திருக்கோவிலில் குருபூஜை நடைபெறும். மஹா சிவராத்திரி மைதானத்தில், ஈஷா பிரம்மச்சாரிகளின், ஆதிசங்கரர் இயற்றிய நிர்வாண சதகம் உச்சாடனத்துடன் விழா இனிதே துவங்கும்.
நேரம் நள்ளிரவைத் தொடும்போது, அந்நாளின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான, அங்கு கூடியிருக்கும் பெரும் திரளான மக்களுக்கு சக்தி வாய்ந்த தியானத்தின் மூலம் சத்குரு அவர்கள் தீட்சை வழங்குவார்கள். பிறகு, புனிதமான அந்நாளில் அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு, ஈஷா தன்னார்வத் தொண்டர்களால் தயாரிக்கப்பட்ட அன்னதானம் வழங்கப்படும். அடுத்த நாள் காலை 6 மணிக்கு சத்குரு அவர்களுடன் ஒரு தியானத்துக்குப் பிறகு, மகா சிவராத்திரிக் கொண்டாட்டங்கள் இனிதே நிறைவுறும்.
இந்த இரவு முழுவதுமான கொண்டாட்டங்களின் போது சர்வதேச அளவில் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் வண்ணமயமான கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேறும். இந்த கலாசார நிகழ்ச்சிகளில் புகழ் மிக்க பாடகர் - இசையமைப்பாளர் இணையான கலோனியல் கஸின்ஸ்-பத்மஸ்ரீ ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ், புகழ் பெற்ற பாப், ராக் பாடகரான கைலாஷ் கேர், த்ருபத் இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வசிபுதீன் டாகர் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஈஷா யோகா மையத்துக்கு வந்து இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக, இந்நிகழ்ச்சிகள் ஆஸ்தா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. மேலும் ஈஷா அறக்கட்டளை, இந்நிகழ்ச்சிகளை இணையதளத்தின் வாயிலாக நேரடியாகவும், சற்றே தாமதமான ஒளிப்பரப்பாகவும் வழங்குகிறது. அன்றைய புனிதமான இரவுப்பொழுதை இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் 150க்கும் அதிகமான ஈஷா மையங்களும் விமரிசையாகக் கொண்டாடுகின்றன.
எப்படி அங்கு சென்று சேருவது?
ஈஷா யோக மையம், கோவையிலிருந்து பேரூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து வாடகைக்கார் வசதிகள் உண்டு. சொந்த வாகனத்தில் வருபவர்கள், பேரூர் சாலையில் 23 கிலோ மீட்டர் வந்து இருட்டுப்பள்ளம் என்ற இடத்தில் வலது பக்கம் திரும்பி 7 கிலோ மீட்டர் வர வேண்டும்.
விமானப் பயணம்: கோவையில் இருக்கும் விமான நிலையத்துக்கு டெல்லி, சென்னை, மும்பை மற்றும் ஹைதிராபாத் போன்ற பெரிய நகரங்களிலிருந்து நேரடி விமான வசதி உள்ளது.
அருகாமை இரயில் நிலையம்: ஈஷா யோகா மையத்திலிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் கோயம்புத்தூரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
சாலைவழிப் பயணம்: நகரப் பேருந்து நிலையத்திலிருந்து மையம் வரை பஸ் (எண்: 14-D) வசதி உள்ளது. அல்லது பூண்டி பேருந்தில் ஈஷா யோக மையம் நிறுத்தம் வரை வந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும். அல்லது செம்மேடு பேருந்தில் (எண் : 14-A) செம்மேடு வரை வந்து ஆட்டோ மற்றும் டாக்ஸியில் (5 கிலோ மீட்டர்) வரலாம்.
மையத்தில் தங்க விரும்புபவர்கள், முன்கூட்டியே அறைக்கு பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு: 0422 - 2515471, 2515472