அதிமுக – திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - விஜயகாந்த் பேச்சு

வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (17:07 IST)
மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக - அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நாகையில் பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
Vijayakanth - DMDK
மின்சாரம் இல்லை, முப்போகம் விளைந்த பகுதி. தற்போது ஒரு போகம் சாகுபடி நடைபெறுகிறது. 8 மணி நேரம் மின்தடை, அறுவடைக்கு எந்திரங்கள் இல்லை. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூரை தனி தாலுகாவாக மாற்றுவேன் என கடந்த முறை திமுக கூறியது. ஆனால் செய்யவில்லை.
 
திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தோண்டி கொண்டுதான் இருக்கிறார்கள். பணி நிறைவு பெறவில்லை. கமலாலய குளத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல நாட்களாகியும் அதனையும் சீரமைக்கவில்லை. இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி வரும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். டெபாசிட் வாங்க முடியாத நிலை ஏற்படுத்திட வேண்டும்.

மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது. அதன் பின் அதிமுக அரசு தடையில்லா சான்றும் வழங்கியது. ஆனால் மக்களின் எதிர்ப்பால் திடீரென அந்த திட்டத்தினை ஆய்வு செய்ய அதிமுக அரசு ஒரு குழு அமைத்தது. குழு அமைத்து 8 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மீத்தேன் திட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய 3 கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகிறது.
 
நாகையில் சிறிய துறைமுகம் செயல்பட்டு வந்தது. அதன் மூலம் வெங்காயம், மீன் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த துறைமுகம் செயல்படவில்லை. மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் என கூறினார்கள். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அரசு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறது. கடிதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா?
 
மோடி தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றி தருவோம். இன்று திமுக சொத்து விவரங்களை அதிமுகவும், அதிமுகவின் சொத்து விவரங்களை திமுகவும் மாறி, மாறி வெளிப்படுத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம். நிச்சயம் தேவைகளை நிறைவேற்றி தருவோம். திமுக 5 முறை ஆட்சி செய்தது. அதிமுக 3 முறை ஆட்சி செய்து வருகிறது. அதிமுகவும், திமுகவும் 40 ஆண்டுகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
 
எனவே மோடி தலைமையிலான ஆட்சி அமைந்திட 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே நாகை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.
 
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்