தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு டிரம்மிற்குள் கிடந்த வாலிபர் உடல்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (19:13 IST)
நத்தம் அருகே தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட ஆண் பிணம், பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து, பாலத்திற்கு அடியில் மர்ம நபர்களால் வீசப்பட்டது.
 

 
நத்தம்-செந்துறை ரோட்டில் அய்யனார்புரம் அருகே, நேற்று புதன்கிழமை [11-02-15] அன்று காலை கூக்கரைக்கல் ஓடை பாலத்தின் அடியில் ஒரு பிளாஸ்டிக் டிரம் மூடிய நிலையில் இருந்தது. அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற சிலர் டிரம்மை திறந்து பார்த்தனர். திறந்ததும் துர்நாற்றம் வீசியது.
 
உப்பு, சர்க்கரை கொட்டப்பட்ட நிலையில் டிரம்மினுள் உடல் இருந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு உடனே தகவல் கொடுத்தனர். நத்தம் காவல்துறை ஆய்வாளர் உலகநாதன், உதவி ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
 
உடலை வெளியில் எடுத்து பார்த்த போது இரண்டு கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இருந்தது.
 
ஒரு பாலிதீன் பையில் துண்டிக்கப்பட்ட தலை வெட்டு காயத்துடன் சிதைந்த நிலையில் இருந்தது. கை, கால்களை வேறு இடத்தில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
பிரேத பரிசோதனைக்காக உடலை நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யாரென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகள் யாரென்றும் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்