அதிமுக எம்எல்ஏவிற்கு நெஞ்சுவலி: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

வியாழன், 11 பிப்ரவரி 2016 (13:59 IST)
ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரோஜா-விற்கு திடீரென்று நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. தற்போது, இவர், தீவிர சிகிச்சை பிரிவில் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருக்கும் சரோஜா (வயது 55). நேற்று பாப்ப நாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இரவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது, அருகில் இருந்த உறவினர்கள் அவரை உடனடியாக வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அவரை சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 
அவரது உடல் நலம் குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர் கூறும்போது “எம்.எல்.ஏ. உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை, விரைவில் அவர் குணமடைந்து விடுவார்” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்