பண தகராறு: தண்ணீர் கேன் வியாபாரியை அடித்துக் கொலை செய்த நண்பர்

வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:55 IST)
சென்னை தேனாம்பேட்டையில், தண்ணீர் கேன் வியாபாரியை பண தகறாறு காரணமாக அவரது நண்பரே அடித்துக் கொலை செய்துள்ளார்.
 
சென்னை அசோக்நகர், 12 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அவருக்கு வயது 52. வீடுகளுக்குத் தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
 
இவரது நண்பர் செல்வம், சென்னை தேனாம்பேட்டை, தெற்கு போக் சாலையில் வசித்துவருகிறார். செல்வமும், தண்ணீர்கேன் வியாபாரம் செய்து வருபவர்.
 
இந்நிலையில், தொழிலை மேம்படுத்துவதற்காக செல்வத்திற்கு, ஆரோக்கியதாஸ் ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்து உதவியுள்ளார். அந்த பணம் போதவில்லை என்று தனது மோதிரத்தையும் கொடுத்து, அடகு வைத்து செலவு செய்து கொள்ளும்படி ஆரோக்கியதாஸ் கூறியதாகக் கூறப்படுகிறது.
 
இதை பெற்றுக் கொண்ட செல்வம், வாங்கிய பணத்தையும், மோதிரத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வத்தை சந்தித்து, தான் கொடுத்த பணம் மற்றும் மோதிரத்தை திருப்பி தருமாறு ஆரோக்கியதாஸ் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இது மோதலாக வெடித்துள்ளது.
 
அப்போது, செல்வமும், அவரது நண்பர் விஜயகுமார் என்பவரும் சேர்ந்து உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் ஆரோக்கியதாசை தாக்கியுள்ளனர். இதில் ஆரோக்கியதாஸ் பலத்த காயம் அடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக ஆரோக்கியதாஸ் உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் கொலை வழக்குபதிவு செய்து, செல்வம் மற்றும் விஜயகுமார் இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்