நாங்களும் தமிழ்நாட்டுல பெரிய கட்சிதான்! – மார்தட்டும் வி.பி.துரைசாமி!

புதன், 12 ஆகஸ்ட் 2020 (12:41 IST)
மத்திய அரசு இடஒதுக்கீட்டில் அநீதி இழைத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்ததற்கு பதிலளித்துள்ள வி.பி.துரைசாமி தமிழகத்தில் பாஜக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும் என பேசியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் ஓபிசிக்கு சரியான அளவில் இடஒதுக்கீடு அளிக்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி மத்திய அரசு எவ்விதத்திலும் இடஒதுக்கீட்டில் அநீதி அளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் பாஜக வலுவடைந்திருப்பதாக கூறிய அவர் “முன்னர் தமிழகத்தில் அதிமுக VS திமுக என்று இருந்த நிலை தற்போது மாறி பாஜக Vs திமுக என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும். பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து வெற்றி காண்போம்” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு நிகரான பெரிய கட்சியாக பாஜக உருவாகியுள்ளதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளதுடன், திமுக – அதிமுக போட்டியிலிருந்து அதிமுகவை கழற்றிவிட்டு அந்த இடத்தில் பாஜகவை சேர்த்து பேசியுள்ளதும், பாஜக தலைமையின் கீழ் கூட்டணி என்றதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்