டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க தந்தை மனு

புதன், 10 பிப்ரவரி 2016 (17:43 IST)
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 

 
என்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக விஷ்ணுப்பிரியா தந்தை ரவி குற்றம்சாட்டி வருகிறார்.
 
இந்நிலையில், டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி யுவராஜிடம் கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி அவர் மீண்டும் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்