அதிமுக அரசு வெறும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் அரசாக மட்டுமே உள்ளது: விஜயகாந்த்

வியாழன், 3 செப்டம்பர் 2015 (16:54 IST)
அதிமுக அரசு வெறும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் அரசாக மட்டுமே உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக சார்வில், திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூரில் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு வாழ்வாதார நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (03.09.2015) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு விஜயகாந்த் பேசியதாவது:

'கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தவித தொழிலும் முன்னேற்றம் அடையவில்லை. அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஊழல் செய்கின்றனர். மக்களுக்காக உழைக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றனர். திருப்பத்தூரில் கூட்டம் நடத்த 15 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரியும், ஆளும் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. காவல்துறை யாருக்கும் பயப்படாமல் மக்களுக்காக மட்டும் வேலை பார்க்கும் நிலை தேமுதிக ஆட்சியில் அமரும் போது வரும். முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கும் எந்த அறிவிப்பும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிமுக அரசு வெறும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் அரசாக மட்டுமே உள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்