சென்னையை அடுத்த மாமண்டூரில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. விஜயகாந்த் அரசியலுக்கு வரும் முன்பிருந்தே இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. பல வருடமாக நடந்து வரும் இந்தக் கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி வரையறுத்துள்ளபடி ஊதியம் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற மாணவர் அமைப்பு விஜயகாந்தைக் கண்டித்து சென்னையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளது. அதில், கல்லூரியில் மாணவர்களிடம் இருந்து கட்டணமாக பெறும் பணத்தில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல், மகனின் படப்பிடிப்புக்கு விஜயகாந்த் செலவிடுவதாக விமர்சித்துள்ளனர். சென்னையின் பல பகுதி மற்றும் கல்லூரி வளாகத்திலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.