ஒசாமா பின்லேடன் படத்தை நான் பார்க்கவில்லை - விஜயகாந்த்

வியாழன், 2 பிப்ரவரி 2017 (15:22 IST)
ஜல்லிக்கட்டு வேண்டி சென்னை மாணவர்கள் போராடிய போது, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் படத்தை நான் எங்கேயும் பார்க்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றுகூடி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். அப்போது சிலர் ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை வைத்திருந்ததாக கூறப்பட்டது. அந்த புகைப்படத்தை பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவு செய்திருந்தார்.
 
மேலும், சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இதுபற்றி பேசினார். அதனால் தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனக்கூறினர். ஆனால், அதன்பின் அந்த புகைப்படத்திற்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்தி வெளியானது. எனவே இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என ஓ.பி.எஸ் சட்டசபையில் பின்வாங்கினார். 
 
அதன்பின், இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சிலர்,  கடந்த டிசம்பர் மாதம், நடத்திய பேரணியில் கலந்து கொள்வதற்காக  சென்ற போது, ஒசாமா பின்லேடன் படம் பதிந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தனர் என செய்திகள் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் “ மாணவர்கள் போராட்டத்தின் போது, நான் எங்கேயும் ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை பார்க்கவில்லை.  வாட்ஸ் அப்பில் கூட நான் பார்க்கவில்லை. மாணவரகள் மீது தடியடி நடத்தியது மிகவும் தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசு ஒன்றும் செய்யவில்லை” எனக்கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்