'கத்தி' கொண்டாட்டத்தில் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் பலி: விஜய் இரங்கல்

வியாழன், 23 அக்டோபர் 2014 (19:32 IST)
கேரளா மாநிலம் பாலக்காட்டில் 'கத்தி' ரிலீஸ் கொண்டாட்டத்தில் விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர் ஒருவர் உயிரிழந்ததற்கு, நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தீபாவளி அன்று தமிழ்நாட்டு, கர்நாடாக, கேரளா ஆகிய மாநிலங்களில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் பலரும் விஜய்க்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்தனர்.
 
இதில் கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரி என்ற இடத்தில் விஜய் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும்போது உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்தார். தீபாவளி அன்று மதியம் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது.
 
ரசிகர் உன்னி கிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் விஜய், "வடக்கன்சேரியில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணனின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் பிரியமானவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
 
தங்களது உயிருக்கும், மற்றவர்களது உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் பண்டிகை காலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உங்களது ஆதரவை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
 
தயவு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். இல்லையேல் இதுபோன்ற அசம்பாவிதங்களையும், தாங்க முடியாத வலிகளையும் சந்திக்க நேரிடும். உங்களை நீங்கள் மதிப்பதே, என்னை நீங்கள் மதிப்பதற்கான அடையாளம்" என்று விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்