நாங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுபவர்கள்: தொல்.திருமாவளவன் பேச்சு

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (08:13 IST)
சேலத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை மாநாட்டில், நாங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுபவர்கள் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை மாநாட்டை தொல்.திருமாவளவன் தொடக்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

“எங்களைக் குற்றவாளிகளாகவும், கலவரத்தைத் தூண்டுபவர்களாகவும் எண்ணி மாநாட்டுக்குத் தடை விதித்தனர். ஆனால், நாங்கள் குடிசைகளைக் கொளுத்துபவர்கள் அல்லர். மாறாக, இலவசக் கல்வியைக் கேட்பவர்கள்.

எங்களுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சேர்த்துதான் இலவசக் கல்வியைக் கேட்கிறோம். நாங்கள் ஜாதி வெறியர்கள் அல்லர். மாறாக, அனைத்து சமூகத்தவரையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்பதற்காகப் போராடுபவர்கள்.

அரசியல் ஆதாயத்துக்காக மற்ற கட்சிகளைப் போன்று நேர்மையற்ற முறையில் நாங்கள் செயல்படுபவர்கள் அல்லர். நாங்கள் தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுபவர்கள் என்பதால்தான் தேர்தல் தோல்வியைக்கூட கருத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி கோரி இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அரசே அனைத்துப் பள்ளிகளையும் ஏற்று, ஜாதி, மதப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும். இதற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யக் கூடாது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணமின்றி படிக்கும் நிலைமை உருவாக வேண்டும். பிளஸ் 2 வரையிலும் தமிழ் வழிக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்ற இருந்தோம். ஆனால், அதற்கான கால அவகாசம் போதவில்லை“ என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்