திமுக வழியில் விடுதலை சிறுத்தைகள் - ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை

வியாழன், 28 மே 2015 (04:35 IST)
தமிழகத்தின்  தலைநகரான சென்னை அருகே உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிடபோட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 
 
ஸ்ரீரங்கம் இடைதேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்தது. தற்போதும் அதே நிலைப்பாட்டை ஆர்.கே.நகர் இடைதேர்தலிலும் எடுத்துள்ளோம். 
 
இந்த இடைதேர்தலில் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்குத்தான் ஆதரவாக செயல்படுவார்கள். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பயனும் ஏற்படாது. மேலும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம். 
 
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த கருத்தரங்கம் ஜுன் 9 ஆம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.  

ஏற்கனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை என திமுக தான் முதலில் முடிவு எடுத்து அறிவித்தது. இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்