பாஜக பிரமுகரின் காரில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்

திங்கள், 28 நவம்பர் 2016 (15:58 IST)
சேலம் அருகே பாஜக பிரமுகர் காரில் கொண்டு சென்ற 20.55 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


 

சேலம் மாவட்டம் குமாராசாமிப்பட்டியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெரமனூரைச் சேர்ந்த அருண் என்பவரின் காரை மறித்த காவல்துறையினர், அதில் இருந்த பையில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதில் 18.52 லட்சம் ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாகவும், ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் 100 ரூபாய் நோட்டுகளாகவும் 50000 ரூபாய் மதிப்புள்ள 50 ரூபாய் நோட்டுகளுமாக இருந்தன.

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் நபர் ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டுள்ளனர். அதற்கு இவை தனது பணம் தான் என்று கூறிய அவர் தான் எங்கு வேண்டுமானாலும் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட அருண் சேலம் மாநகர பாஜக இளைஞரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்