வட கிழக்குப் பருவ மழை பாதிப்புகள் தொடர்பாக, பொதுமக்கள் தங்களின் புகார்களைக் கட்டணமில்லாத் தொலைபேசியில் தெரிவிக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மழை தொடர்பான புகார்களை மாநில அளவில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்.1070-லும், மாவட்ட அளவில், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள தொலைபேசி எண்.1077-லும் தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, 19.10.2014 அன்று, வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் நடத்திய அவசரக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர், வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொண்டு வருகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலை குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை கண்காணித்து உரிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.