இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசிதழில், இந்தப் புத்தகங்கள் ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் ஜாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் இருப்பதால் இந்தப் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்குத் தெரிவித்திருக்கும் ஆட்சேபம் குறித்து, புத்தகத்தை வெளியிட்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமானிடம் கேட்டபோது, மதுரை வீரனின் உண்மையான வரலாற்றை தெரியப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் புத்தகத்தை வெளியிட்டதாகவும் பிற சமூகங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லையென்றும் தெரிவித்தார்.