காதல் தம்பதிகளுக்காக சமாதானம் பேச சென்ற எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்

புதன், 8 ஜூலை 2015 (01:58 IST)
காதல் விவகாரத்தில் சமாதானம் பேச முயன்ற சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் விஜயலட்சுமி.
 
இந்நிலையில், விஜயலட்சுமியும், அதே பகுதியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவரும், காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு விஜயலட்சுமியின் தந்தை கோவிந்தராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, விஜயலட்சுமி-சிவராமகிருஷ்ணன் தம்பதி சிதம்பரம் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சுகந்தி ஆகியோரிடம் முறையீடு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரத்தில், விஜயலட்சுமிக்கும், அவரது பெற்றோர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி முயற்சி செய்துள்ளார்.
 
ஆனால், இதை ஏற்காத கோவிந்தராஜும், அவரது மகனும் செல் போன் மூலம் எம்எல்ஏ பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
 
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் முத்தாண்டிக்குப்பம் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்