பள்ளி மாணவிகளை விலைக்கு வாங்கி பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்: அதிர்ச்சித் தகவல்கள்

வியாழன், 7 ஆகஸ்ட் 2014 (15:33 IST)
பள்ளியில் படித்துவந்த மாணவிகள் 2 பேரை விலைக்கு வாங்கி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த கும்பலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்துவந்த 2 மாணவிகள் ஜூலை மாதம் 11 ஆம் தேதி காணாமல் போனது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களைப் பல இடங்களிலும் தேடியதில் அந்த இண்டு மாணவிகளும் வடலூரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் 28 வயதுடைய சதீஷ்குமார் என்பவரிடம் சிக்கி இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் மாணவிகள் இருவரையும் மீட்டனர்.

பின்னர் அவர்களை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன.

மாணவிகள் இருவரும் ஞாயிற்றுக் கிழமைகளில் திட்டக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு செல்வது வழக்கம். தேவாலயத்தில் 60 வயதுடைய அருள்தாஸ் என்ற மதபோதகர், மாணவிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்தத் தகவலை அந்தப் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் தெரிந்து கொண்டு, மாணவிகள் இருவரையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

பின்னர், விருத்தாசலத்தில் பாலியல் தொழில் நடத்திவந்த கலா என்பவரிடம் அவர்கள் இருவரையும் ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளார்.

அவர்களை வாங்கிய கலா அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெண் ஜெமீனா என்பவரிடம் ரூ.25 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். ஜெமீனா வடலூரைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

சதீஷ்குமார் 2 மாணவிகளையும் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் என பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

அப்போது அரசியல் பிரமுகர்கள் சிலரும் வந்து சென்றதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நபர்களைப் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு மாணவிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த மதபோதகர் அருள்தாஸ், லட்சுமி, கலா, ஜெமினா, சதீஷ்குமார், ஆகியோர் கைது செய்யப் பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்