மதவெறியின் கண்களுக்கு முதல்வரும், சூப்பர் ஸ்டார் நடிகரும் ஒன்றுதான்

செவ்வாய், 10 நவம்பர் 2015 (09:05 IST)
மதவெறியின் கண்களுக்கு ஒரு மாநில முதல்வரும், சூப்பர் ஸ்டார் நடிகரும், சாமானிய மக்களும் ஒன்றுதான் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ”மோடி தலைமையிலான பாஜக அரசு சகிப்புத்தன்மை துளிகூட இல்லாத அரசாக உள்ளது.
 
நடிகர் ரஜினிகாந்த், திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான உடனேயே அவர் பகிரங்கமாக மிரட்டப்பட்டார். மதவெறி சக்திகள் மிகவும் வெளிப்படையாகவே அவருக்கு மிரட்டல் விடுத்தன.
 
அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மாட்டுக்கறி சாப்பிடுவது அப்படி ஒன்றும் குற்றமான செயல் அல்ல என தனது கருத்தைப் பதிவு செய்தவுடன், மதவெறி சக்திகள் அவரது தலையை வெட்டப் போவதாக பகிரங்கமாக பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே கொலை மிரட்டல் விடுத்தனர்.
 
மதவெறியின் கண்களுக்கு ஒரு மாநில முதல்வரும், சூப்பர் ஸ்டார் நடிகரும், சாமானிய மக்களும் ஒன்றுதான். எனவே மதவெறியை எதிர்த்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பது மிக அவசியம்.
 
தமிழகத்திலே, மக்கள் ஆதரவோடு, நம்பிக்கை அளிக்கும் மாற்றாகமக்கள் நலக் கூட்டணி உதயமாகி உள்ளது. தேமுதிக தலைவர் இந்த அணியை பாராட்டியுள்ளார். நிச்சயம் அவரும் இந்த அணியில் இடம்பெறும் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்