பொதுமக்களின் நலனில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அக்கறை இல்லை: தமிழக அரசு வாதம்

புதன், 30 ஜனவரி 2019 (11:55 IST)
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள சட்ட நடைமுறைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பின்பற்றவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 


ஸ்டெர்லைட் ஆலை  தொடர்பாக வேதாந்தா குழுமம், தமிழக அரசு, வைகோ உள்ளிட்டோர்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவினை தாக்ககல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். அவர் வாதிடுகையில்,  ஸ்டெர்லைட் ஆலையையும், அதைச் சுற்றியுள்ள பகுதியையும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, மாசு தொடர்பாக தமிழக அரசு தெரிவித்த எவ்வித அறிவியல்பூர்வமான ஆவணங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. தற்போது ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள நிலத்தடி பகுதிகளில் கரைந்துள்ள திடப்பொருள்கள் (டிடிஎஸ்) அளவு குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் ஆய்வு நடத்த வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிவியல்பூர்வமான அறிக்கை தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை. 
 
பொதுமக்களின் நலன் குறித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அக்கறை குறைவாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தில் அனைத்துவித அம்சங்களையும் ஆராய வேண்டும் என்றார்.
 
இந்த வழக்கு விசாரணை இன்றும் (ஜன.30) நடைபெறும்  என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்