நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்.! மக்கள் நலனை புறக்கணிக்கிறார் என தமிழிசை விமர்சனம்..!!

Senthil Velan

செவ்வாய், 23 ஜூலை 2024 (20:47 IST)
அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
 
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.  இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற நிதிநிலை அறிக்கை மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என தெரிவித்தார்.
 
மத்திய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைங்களையும் நிதி அமைச்சர் மறந்தே போய்விட்டார் என்றும் தமிழ்நாடு என்ற சொல்லே நிதி நிலை அறிக்கையில் இல்லை என்று சொல்வதைவிட, மத்திய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
 
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு:
 
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் வருகின்ற 27-ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மக்கள் நலனை புறக்கணிக்கிறார்:
 
நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

ALSO READ: ஒன்றிய அரசின் பட்ஜெட்.! தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.! முதல்வர் ஸ்டாலின்..!

அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணிப்பதாகவும், கூட்டத்தில் பங்கேற்று நேரில் விவாதித்து தமிழகத்திற்கு தேவையானதை முதல்வர் ஸ்டாலின் கேட்டு பெற வேண்டும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்