விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்காது - தமிழிசை சவுந்தரராஜன்

வெள்ளி, 27 மார்ச் 2015 (19:44 IST)
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது. இதனை ஒட்டி பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழிசை தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிகளை பகிர்நது கொண்டார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கர்நாடக மேகதாதூவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொண்டதை சுட்டிகாட்டினார். கர்நாடகாவின் நடவடிக்கையை கண்டிப்பதாக தெரிவித்த அவர் எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முழு அடைப்பில் பங்கேற்க போவதில்லை என்று கூறினார். 
 
நியூட்ரினோ திட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் வைகோ உள்ளிட்ட ஒரு சிலர் தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்களும் வரவிடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டினார். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைளில் பாஜக களமிறங்கியுள்ளதாகவும் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிசை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்