சாப்பாட்டு பாத்திரத்தை கழுவ மறுத்த மாணவனை ரவுடிகளை வைத்து மிரட்டிய ஆசிரியர்

புதன், 10 டிசம்பர் 2014 (16:19 IST)
ஆசிரியரின் சாப்பாட்டு பாத்திரத்தை கழுவ மறுத்ததால், மாணவனை ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளார்.

ஒட்டன் சத்திரத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்ற மாணவன் சமத்துவபுரம் அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறான்.  பள்ளியில் முருகன் என்ற ஆசிரியர் தான் சாப்பிட்ட பாத்திரத்தை சுத்தம் செய்து தரும்படி மாணவனிடம் கூறியுள்ளார்.

தினமும் தொடர்ந்து இதே வேலை செய்து வந்த மாணவன் ஒருநாள் சாப்பாட்டு பாத்திரத்தை கழுவ மறுத்ததால், ஆசிரியர் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

அவர்களும் இது குறித்து ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் அதற்கு முறையான பதில் அளிக்காமல் அவர்களை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பள்ளி ஆசிரியர் குறித்து துண்டு பிரசுரம் கொடுத்துள்ளனர்.

எனவே ஆசிரியர், ரவுடிகளை வைத்து மிரட்டி மனோஜ்குமாரைத் தாக்கியுள்ளார். இதனால் மனோஜ்குமார் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்ததால், மாணவனின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்