ஜி.எஸ்.டியால் தமிழர்களுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா? – அமைச்சர் ஜெயக்குமார்

திங்கள், 23 செப்டம்பர் 2019 (12:34 IST)
கோவாவில் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டியால் தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவாவில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் குறித்து பேசிய அவர் “ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் 8.17 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு மொத்தமாக 4500 கோடி வரவேண்டி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தொழில் உற்பத்தியும் அதிகரிக்கும்.

மேலும் ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் குறைகளும் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. விரைவில் அவற்றிற்கு தீர்வு காணப்படும்” என அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் சொன்ன தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது தமிழகத்தில் தொழில் நடத்தும் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டின் அடிப்படையிலா அல்லது உள்ளூர் வியாபாரிகளின் முதலீட்டு மதிப்பின் அடிப்படையிலா என்று விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்