பிரதமர் மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் விமர்சித்துப் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பிரதமர் மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசிய இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.