ஸ்டாலின் மாட்டுக்கறி சாப்பிடுவாரா; பின் தமிழகத்தில் என்ன நடக்கிறது என பார்ப்போம்: தமிழிசை சவால்!

வியாழன், 1 ஜூன் 2017 (09:46 IST)
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் மாட்டிறைச்சி விருந்து வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மாணவர்களும் தாக்கப்பட்டனர்.


 
 
தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் பாஜகவை விமர்சிக்கும் போது மக்கள் விரோத போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது என்றார் காட்டமாக.
 
இதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக விவசாயிகளுக்காக எந்த நல்ல திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அவர்களை பாதுகாக்கவும் இல்லை. தென்னக நதிகளை இணைக்க திமுக எடுத்த முயற்சி என்ன? என கேள்வி எழுப்பினார்.
 
மேலும் மாட்டிறைச்சி தொடர்பாக பேசிய அவர், மாட்டிறைச்சி சாப்பிடவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படவில்லை. மாநில அரசின் உரிமையில் தலையிடவில்லை. தவறாக அரசியல் செய்யவே இதனை தவறாக முன்னிறுத்துகின்றனர். பால் தரும் பசுக்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன என்றார்.
 
மேலும் சென்னை ஐஐடியில் மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தியது போல் மு.க.ஸ்டாலினும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்துவாரா? மாட்டுக்கறி சாப்பிடுவாரா? அதை முதலில் அவர் செய்யட்டும். பின் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் சவாலாக.

வெப்துனியாவைப் படிக்கவும்