சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: ஜெயலலிதா அறிவிப்புக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்பு

புதன், 26 ஆகஸ்ட் 2015 (23:20 IST)
சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ் திரையுலகில் முடிசுடா மன்னனாக, நடிப்பில் இமயம் போல் உயர்ந்து 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றிக் கொடி நாட்டியவர்.
 
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்களை ஏற்று உணர்ச்சிப்பூர்வமாக நடித்து, மக்களிடையே தேசபக்தியை வளர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அப்படிப்பட்ட சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தென்னிந்திய நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்ட தமிழக அரசு கடந்த 2002ஆம் ஆண்டு 65 சென்ட் நிலம் வழங்கப்பட்டு, இதுவரை அப்பணி நிறைவேறாதது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
 
தற்போது, அந்த வருத்தத்தை போக்கும் வகையில், தழிக அரசே மணி மண்டபம் கட்டும் என்று அறிவித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.
 
ஆனால், சட்டமன்றத்தில் விதி 110ன்கீழ் வாசிக்கிற அறிவிப்புகளைப் போல இந்த அறிவிப்பும் செயலுக்கு வரலாமல் இருக்காது என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்