மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தங்கள் அறிவாலும், உழைப்பாலும் உயர்ந்த இனம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழனின் குரலை கேட்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், தமிழர்கள் தங்கள் அடையாளத்தை விட்டுவிடாமல், தங்கள் வேர்களான தமிழையும், பண்பாட்டையும் மறக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் பேசுகையில், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கு நடக்கும் வளர்ச்சியையும், மாற்றங்களையும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கீழடி, பொருநை போன்ற அருங்காட்சியகங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று தமிழர்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று வலியுறுத்தினார்.