சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும் தப்பவே முடியாது - சுப்பிரமணியன் சாமி

திங்கள், 4 மே 2015 (16:29 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும் தப்பவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரம‌ணியன் சாமி கூறினார். 
 
கோவை மாவட்டம், ஆனைக்கட்டியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று கோவை வந்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இன்று மதியம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
 
அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும் தப்ப முடியாது. வழக்கு அந்தளவு வலுவாக உள்ளது. மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்க முடியும்?. எனவே இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு நீதிபதியால் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் கருதுகிறேன்.
 
நில கையகப்படுத்தும் சட்டம், சாலை பாதுகாப்பு சட்டம், புதிய இன்சூரன்ஸ் மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தாலும், தனி மெஜாரிட்டி பெற்றிருப்பதால் அந்த சட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது.
 
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக கூட்டணி அமைக்குமா என்பதை இப்போது கணிக்க வேண்டியதில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதியின் குடும்பம், மாறன், சிதம்பரம் என எல்லோரும் சிறைக்கு செல்வது உறுதி. வழக்கு விசாரணை சற்று தாமதமாகலாமே தவிர வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது.
 
அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுதான். நாட்டுக்கு துரோகம் செய்வது, ஊழல் செய்வதுதான் அவர்களின் கொள்கை. அருண் ஷோரி இப்போது பாஜனதாவில் இல்லை. யாரைப்பற்றியும் கருத்துக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது. அது அவரது கருத்து.
 
யாருக்கு தாலி போட இஷ்டம் இல்லையோ அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம். அதற்காக விழா நடத்துவது என்பது தேச துரோக வேலை. இது மாதிரி செய்பவர்களை  சிறையில் அடைக்க வேண்டும்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்