இரு சக்கர வாகனத்தை துரத்தி வந்த மர்ம விலங்கு! – சிவகிரியில் பீதி!

திங்கள், 9 மே 2022 (13:00 IST)
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மர்ம விலங்கு ஒன்று துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவரும் இவர் மகள் யாழினியும் பக்கத்து ஊரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென இரண்டு அடி உயரம் கொண்ட மர்ம மிருகம் ஒன்று ஸ்கூட்டரை பின்தொடர்ந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது எதிரே கார் ஒன்று வரவும் மர்ம விலங்கு காட்டிற்கு சென்று மறைந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வன அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி சுற்றுப்புறங்களில் மிருகத்தின் காலடி தடங்களை ஆராய்ந்துள்ளனர்.

அப்பகுதியில் சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் இருக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்