கலைஞர் அறிவாலயத்தில் கண்ணீர் விட்ட வைகோ! முக ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு

திங்கள், 25 பிப்ரவரி 2019 (05:54 IST)
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலினின் பேச்சை கேட்டு வைகோ தாரை தாரையாக கண்ணீர் சிந்தியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று கலைஞர் அறிவாலயத்தில் மதிமுக வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை  என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 'கலைஞரால் போர் வாள் என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தை காக்கவே. வயது முதிர்ந்த நிலையில் தலைவரைச் சந்தித்த போது, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் வைகோ. வைகோவிற்கு நான் துணை நிற்பேன். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு என பல போராட்டங்களை வைகோ முன்னின்று நடத்தி வருகிறார். அவர் போராட்டங்களுக்கு துணை நிற்போம்.
 
நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 பெற புயல்வேகப் பயணத்திற்கு வைகோ தயாராகி விட்டார். மத பயங்கரவாதத்தை முறியடிக்க தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்’’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். ஸ்டாலின் பேசப்பேச வைகோ கண்ணீர்விட்ட காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது பலரை நெகிழ்ச்சி அடைய செய்தது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்