ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி: களத்தில் குதித்த வைகோ

செவ்வாய், 7 ஜூலை 2015 (01:42 IST)
திருவைகுண்டம் அணைப்பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கி வைத்தார்.


 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 28ஆம் தேதி திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்டு, தமிழக அரசு தூர்வாருவதற்கு தாமதித்தால், விவசாயிகளைத் திரட்டி நானே தூர்வாரும் பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார்.
 
ஜூலை 1 ஆம் தேதி சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில், திருவைகுண்டம் அணை உட்பட தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
இதற்கிடையே ஜூலை 1 ஆம் தேதி திருவைகுண்டம் அணைப்பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதனையடுத்து, திருவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தை வைகோ இயக்கினார்.
 
பின்பு தாமிரபரணி தண்ணீரில் இறங்கி, இந்தத் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் வீரம் செறிந்தது. கடந்த 2004ஆம் வருடம் நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பு இறங்கினேன் வெற்றி கிடைத்தது. அதுபோல் தற்போதும் வெற்றி கிடைக்கும் என்றார்.
 
இந்த நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள் ஜோயல், சரவணன், பெருமாள் மற்றும் நிஜாம், தி.மு.இராசேந்திரன், மின்னல் முகமது அலி, திவான் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்