இலங்கை தமிழர்களுக்கு, தமிழக இளைஞர்கள் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும்: வைகோ

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (10:25 IST)
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இங்குள்ள தமிழக இளைஞர்கள் தான் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
இது குறித்து திருப்பூரில் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழர்கள் பகுதியில் திணிக்கப்பட்ட சிங்கள குடியிருப்புகளை அகற்ற மாட்டார்கள்.
 
இலங்கை இனப்படுகொலை பற்றி பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்ற கருத்தில் மாற்றம் ஏற்பட்டு இலங்கை உள்நாட்டு நீதி விசாரணை நடத்திக் கொள்ளட்டும் என்கிற ரீதியாக இந்திய வெளயுறவுத்துறை துணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் விசாரணை நடத்தப்படாமல் ஐ.நா.சபையில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை.
 
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டப் பேரவையில் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அவரை நான் மனதார பாராட்டினேன்.
 
அது போல் இலங்கை இனப்படுகொலை பற்றி பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிட முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இங்குள்ள தமிழக இளைஞர்கள் தான் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும்" என்று வைகோ கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்