"எந்த கூண்டில் அடைத்தாலும் அங்கிருந்தபடியே வழிநடத்துவேன்" - சசிகலா சவால்

புதன், 15 பிப்ரவரி 2017 (00:19 IST)
எந்த கூண்டில் என்னை அடைத்தாலும் அதிமுகவை அங்கிருந்தபடியே சிறப்பாக வழிநடத்துவேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனைப் பெற்ற சசிகலா கூறியுள்ளார்.


 

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முதல்நாள் திங்கட்கிழமை கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற சசிகலா அங்கேயே தங்கினார். இதற்கிடையில், வழக்கில் குற்றவாளி என்றும் 4 ஆண்டுகள் தண்டனை என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் சரண் அடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டியிருக்கும் நிலையில், சசிகலா இரவு கூவத்தூரில் இருந்து புறப்பட்டார்.

போயஸ் கார்டனிற்கு வந்ததும் அங்கே கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசிய சசிகலா, ‘’நான் எங்கேயோ இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்காதீர்கள். எல்லோருடைய மனதிலும் நான் இருப்பேன். உணர்ச்சிவசப்படாமல் அதிமுகவை தொண்டர்களாகிய நீங்கள் வழிநடத்த வேண்டும்.  

எந்த கூண்டில் என்னை அடைத்தாலும் அதிமுகவை அங்கிருந்தபடியே சிறப்பாக வழிநடத்துவேன். நான் சிறையில் இருந்து வெளியே வரும்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்’’ என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்