பெண் எஸ்.ஐ.யிடம் சில்மிஷம்: வாலிபருக்கு அடி உதை

திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (08:20 IST)
சென்னையில் பெண் எஸ்.ஐ.யிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை மக்கள் மடக்கி தர்ம அடி கொடுத்தனர். 
 
சென்னை பல்லாவரம் ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (37). சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் தி.நகரில் துணி வாங்கிக் கொண்டு ரயிலில் பல்லாவரம் வந்தார். பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த வாலிபர் திடீரென கிருஷ்ணவேணியின் மீது விழுந்ததுடன் சில்மிஷம் செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், வாலிபரை பிடித்து சத்தம் போட்டார். அப்பகுதியினர் ஓடிவந்து வாலிபரை மடக்கி தாக்கினர்.
 
பின்னர் பல்லாவரம் காவல்துறையினர் வந்து பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டு, காவல்நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், சில்மிஷம் செய்த நபர் செங்கல்பட்டு பச்சையம்மன் நகர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரேம்தாஸ் (22), பல்லாவரத்தில் ஒரு செல்போன் கடையில் வேலை செய்வது தெரிந்தது. செங்கல்பட்டு ரயிலை பிடிக்க ஓடியபோது தெரியாமல் பெண் மீது இடித்துவிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்