இலங்கையின் உறவை முழுமையாக துண்டிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:37 IST)
சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் இலங்கையின் உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சீன நாட்டின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் அந்நாட்டு அரசின் அனுமதியுடன் நிலைகொள்ளவிருக்கும் நிலையிலும், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசு தனது வலிமையான எதிர்ப்பினைப் பதிவு செய்யாது வாய் மூடிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
 
இலங்கை நாடும், சிங்கள ஆட்சியாளர்களும் ஒருநாளும் இந்தியாவுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். அவர்கள் இந்தியாவுக்கெதிரான சீனாவின் பக்கம் தான் முழுமையாக நிற்பார்கள் என பல ஆண்டுகளாக உரைத்து வந்து உண்மைக்கான நிகழ்காலச் சாட்சியாகவே இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
 
கடந்தகாலத் தவறுகளிலிருந்து இனியாவது பாடம் கற்றுக் கொண்டு, சீனாவின் காலனி நாடாக மாறி நிற்கும் இலங்கையுடான உறவுகளை முழுமையாகத் துண்டித்து அறிவிக்க வேண்டும். சீனாவின் உளவுக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்