பள்ளி மாணவர் தற்கொலை: ஆசிரியர் கைது

புதன், 6 ஜனவரி 2016 (12:13 IST)
17 வயதான 12 ஆம் வகுப்பு மாணவன் பிரகாஷ் நேற்று பள்ளி ஆய்வகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிரகாஷ் என்ற 17 வயதான மாணவனை நேற்று வகுப்பாசிரியர் செபாஸ்டின் செல்வகுமார் சக மாணவர்கள் முன்னிலையில் ரெக்கார்டு நோட்டில் எழுதி வராததால் கண்டித்துள்ளார்.
 
சகமாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் தன்னை கண்டித்ததால், மனமுடைந்த பிரகாஷ் இடைவேளையின் போது பள்ளி ஆய்வகத்தின் உள்ளே சென்று உட்புறமாக பூட்டிக்கொண்டு தனது கையை கத்தியால் வெட்டி, அருகில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
ஆய்வகத்தில் இருந்து புகை வருவதைக் கண்டு ஆசிரியர்களும் மணவர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் பிரகாஷ் தீயில் கருகி பிணமாக கிடந்தார். பின்னர் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
 
மணவன் பள்ளியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவனின் உறவினர்கள் இறப்பு குறித்து உரிய விசாரணை வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
 
இந்நிலையில் காவல் துறையினர் மாணவன் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் செபாஸ்டின் செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி அவரை நேற்று இரவு கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்