ஒரு வழியா முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா?: அவசரமாக கூடும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சனி, 4 பிப்ரவரி 2017 (12:06 IST)
தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிகின்றன. இதற்காக நாளை மாலை அவரசமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


 
 
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். சசிகலா அந்த கட்சியின் பொதுச்செயலாளரானார். ஆனால் சசிகலா முதல்வராக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் வெளிப்படையாக ஊடகங்களில் கூற ஆரம்பித்தனர்.
 
அவரும் முதல்வர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். ஆனால் பல தடங்கல்கள் வந்து அது தடைபட்டு போனது. இந்நிலையில் மீண்டும் பல தடைகளை தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் முதல்வராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
இதற்காக நாளை மாலை அவசர அவசரமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலாவை, தமிழக முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. அன்றைய தினமே சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகரிடம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளிக்க உள்ளார்கள் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இதனையடுத்து 6-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் திங்கள் கிழமை சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்கிறார். அதற்கான திட்டமும் தயாராகி வருகிறது. ஜெயலலிதா இறந்த 62 நாட்களுக்கு பின்னர் தமிழக முதல்வராக சசிகலா தயாராகிவிட்டார் என்ற தகவல் வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்