தனக்கு கொலை மிரட்டல் வருவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா, மேயராக இருந்த எனக்கு எம்.பி பதவி ஒன்றும் சாதாரண பதவி கிடையாது. இந்த பதவியை பெறும் அளவிற்கு நான் அதிமுக-வின் வளர்ச்சிக்கு அத்தனை உழைத்திருக்கிறேன். எனக்கு இந்த பதவி வழங்கப்பட்டபோது என்னைவிட சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுங்கள் என்று மறுத்தேன் என்றார்.
என்னைப் போல் எத்தனையோ பேர் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எந்த நிமிடத்திலும் அவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தூக்கியெறிய ஜெயலலிதா தயங்குவதில்லை. எங்களுக்கும் மானம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. சுயமரியாதை இருக்கிறது. அதையெல்லாம் துச்சமென மதித்து தூக்கி எறிபவர் முதல்வர் ஜெயலலிதா என பேசிய சசிகலா புஷ்பா தனக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தை செய்தியாளர்களிடம் காட்டி, தனது நிலமை குறித்து குமுறினார்.