ஜெ. முதல் அமைச்சராக இருந்த போது, சென்னையின் மேயராக பதவி ஏற்றவர் சைதை துரைசாமி. ஜெ.வின் மறைவிற்கு பின் மது சூதனன், செங்கோட்டையன், பொன்னையன் ஆகியோருடன் சேர்ந்து இவரும் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து, அவர் கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், மற்றவர்கள் சசிகலாவை சின்னம்மா என அழைக்கும் போது, இவர் சசிகலா அரசியலுக்கு வர வேண்டும் என பேட்டி கொடுத்தார்.
இதை சசிகலா குடும்பத்தினர் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் போயஸ் கார்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம், மூத்த தலைவர் ஆலோசனைக் கூட்டம், நடந்து வரும் நிர்வாகிகள் கூட்டம் எதிலும் பங்கேற்காமல் அவர் விலகியே இருந்தார்.
தன்னை சசிகலா குடும்பதினர் ஓரம் கட்டுவதை புரிந்து கொண்ட சைதை துரைசாமி, அவருக்கு எதிராக தற்போது காய் நகத்த துவங்கியுள்ளார் என செய்திகள் வெளியே வந்துள்ளது. சசிகலாவின் தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்களை ஒன்று சேர்க்கும் பணியில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிடமும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.