ஜெயலலிதாவை ஆதரித்து ஆர்.கே.நகர் தொகுதியில் சரத்குமார் 3 நாட்கள் பிரச்சாரம்

ஞாயிறு, 21 ஜூன் 2015 (12:39 IST)
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆதரித்து 3 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
 
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் சரத்குமார் பங்கேற்றார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:–
 
நடிகர் சங்க தேர்தல் பெரிய பிரச்சனை அல்ல. இதனைவிட நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலால் மக்களுக்கு எதுவும் ஆகி விடப்போவதில்லை. அதனால் இதனை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்.
 
தமிழக முதலமைச்சரின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. அவர் மக்களுக்கான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார்.
 
முதலமைச்சர் கொண்டு வந்துள்ள விஷன் 23 உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தமிழகத்திற்கு கிடைத்துள்ள சிறப்பான திட்டங்கள் ஆகும்.
 
இதனை மையப்படுத்தி ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன். வருகிற 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 3 நாட்கள் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.
 
தமிழகத்திலுள்ள தொழிலாளர்கள், ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வந்துள்ள அம்மா உணவகம் அருமையாக செயல்பட்டு வருகிறது.
 
இதனை நாங்களே நேரில் சென்று பார்த்து வியந்துள்ளோம். இதுபோன்ற மக்களுக்கு பயனுள்ள சிறப்பான திட்டங்கள் அதிமுக அரசிற்கு வெற்றியை தேடித்தரும். வரும் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக வுடன் நாங்கள் வைத்துள்ள கூட்டணி தொடரும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்